மழை நீர் சேகரிப்பு
================
பல்லவி
=======
தூறல் தூறல் விழுகின்றது -- மழைச்
சாரல் சாரல் தெரிக்கின்றது!
விழுகின்ற நீரைச் சேகரிப்போம்
வாழ்வில் வளங்களைச் சேர்த்திடுவோம்.
சரணம்
======
வீணாய் போகிற மழை நீரை
தேனாய் ஆக்கிட சேகரிப்போம்
கடலில் கலக்கிற மழை நீரை
நிலத்தடி நீராய் மாற்றிடுவோம்
நீரின்றி ஓர் உயிரேது...
நீரில்லாமல் நெற்பயிரேது?
செயற்கை மழையும் தேவையில்லை
செழிப்பாய் நாமும் வாழ்ந்திடலாம்.
நேரம் இன்றி தவிக்கின்றோம் -- குடி
நீருக்கு நாமும் அலைகின்றோம்,
இயற்கை தருகின்ற மழை நீரை
ஏனோ நாமும் தவிர்க்கின்றோம்!
நன்றே நாமும் வாழ்ந்திடவே
நாளைய தேவைக்கு நீர் சேர்ப்போம்,
இன்றே நாமும் மனம் வைப்போம்
நிலத்தடி நீருக்கு வழி செய்வோம்.
இயற்கை தருகின்ற மழை நீரை
இனிதே நாமும் சேர்த்திடலாம்
நிலத்தடி நீரும் இருந்தாலே,
நிம்மதி தானே வாழ்நாளே!
மண்ணின் வளமும் பெருகிடுமே
மரங்களும் செழித்து வளர்ந்திடுமே
மலர்களும் பூத்து குலுங்கிடுமே,
மனங்களும் மகிழ்ச்சியில் திளைத்திடுமே!