Thursday, December 30, 2010

பிரேமாவை விடவா பிஸிக்ஸ்?



"மச்சி, மைனாவைப் பார்த்தியா?"

"எந்த மைனா?"

"அதாம்மா...பஸ் ஸ்டாண்டிலே சுத்திச் சுத்தி வந்து நீ டாவடிச்சுட்டிருப்பியே பிரேமா."

"பிரேமாவா...எங்கே இருக்கா?"

"நம்ம காலேஜ்லேதான் சேர்ந்திருக்கா, பி.எஸ்.சி கெமிஸ்ட்ரியிலே."

"அடடா, இன்னைக்குக் காலையிலேதாண்டா பீஸ் கட்டி பிஸிக்ஸ் க்ரூப்லே சேர்ந்தேன். தெரிஞ்சிருந்தா கெமிஸ்ட்ரியிலே சேர்ந்திருப்பேனே.என்னோட மார்க்குக்கு அந்த க்ரூப் சுலபமாக் கெடச்சிருக்குமே?"

"ஏண்டா பிஸிக்ஸ்லே இடங்கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்! நீ என்னமோ சலிச்சுக்கறியே?"

"பிரேமாவைவிட பிஸிக்ஸ் பாடமாடா முக்கியம், புண்ணாக்கு? இப்ப என்ன செய்வேன்? ஐயோ ... மூணு வருஷம் அவளோட சேர்ந்து படிச்சா ஒரு லெவல் பண்ணிடலாமே!"-- புலம்பினான் வசந்த்.

அப்போது, பிரேமா தோழியர் புடைசூழ கெமிஸ்ட்ரி சோதனைக்கூடத்துக்கு செல்வதைப் பார்த்த வசந்த் தவித்தான்.

இரவெல்லாம் உறங்கவேயில்லை அவன். எப்படியும் கெமிஸ்ட்ரி க்ரூப்புக்கு மாறிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.

அடுத்த நாள் பெற்றோரிடம் தான் கெமிஸ்ட்ரிக்கு மாற்றிக்கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

"நல்ல க்ரூப்லேர்ந்து ஏன் மாறணுங்கறே"--கேட்ட அப்பாவிடம்,

"அந்த காலேஜ்லே பிஸிக்ஸ்க்கு நல்ல ஆசிரியர் இல்லே. டீச்சிங் சுத்த மோசம். ஆனா...கெமிஸ்ட்ரியிலே ஸ்டேட் ரேங்க், கோல்டு மெடல் எல்லாம் நிறைய வாங்கியிருக்காங்க என்று புளுகினான்.

கெமிஸ்ட்ரி தனக்கு அலர்ஜியாயிற்றே என்று உள்ளூர பயந்தாலும் பிரேமாவின் நினைவுகளே அவனது மூளையைச் சலவை செய்தன.

அடுத்த நான்கு நாட்கள் கல்லூரி அலுவலகத்திற்கு விடாமல் சென்று நச்சரித்துக் கெமிஸ்ட்ரி பிரிவிற்குத் தன்னை மாற்றிக்கொண்டான் வசந்த்.

அன்று சந்தோஷமாகக் கெமிஸ்ட்ரி வகுப்பிற்குள் நுழைந்தவனின் கண்கள் பிரேமாவைத் தேடின. அவள் தென்படாது போகவே விசாரித்தான்.

"அவள் பிஸிக்ஸ் குரூப் வேணும்னு பிரின்ஸிபாலை நச்சரிச்சிட்டு இருந்தாள். ஒரு இடம் இப்பத்தான் காலியாச்சுன்னு அவள் கேட்டிருந்தபடி பிஸிக்ஸ் க்ரூப்புக்கு அவளை மாற்றம் செய்துட்டாங்க" என்று பதில் வந்தது.

(குமுதத்தில் வெளியான என் சிறுகதை)


Friday, December 24, 2010

எப்படிடா கண்ணு?


ஷீலா குட்டி பள்ளி ஓவியப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கிறாள் என்றதும் ஹரிக்கும் அவன் மனைவி சந்திராவிற்கும் ஏக சந்தோஷம்.

ஆண்டு விழாவிற்குச் சென்றார்கள். அங்கே ஷீலா வரைந்திருந்த ஓவியத்தைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். முதல் பரிசு என்று அறிவித்து ஷீலாவை அழைக்கவும், பலத்த கரவொலிக்கிடையே ஷீலா மேடையேறிப் பரிசினைப் பெற்றுக் கொண்டாள்.

பள்ளித் தலைமையாசிரியை பேசும்போது, "குடியின் தீமை என்ற தலைப்பில் படம் வரையச் சொன்னோம். சிறுமி ஷீலா குடிப்பழக்கத்திற்கு முன் ஒரு மனிதன் திடகாத்திரமாக இருப்பது போலவும், குடிப்பழக்கத்திற்க்குப் பின் அதே மனிதன் மெலிந்து ஒரு கால் இழந்து கிடப்பது போலவும் வரைந்திருக்கிறாள். குடியினால் ஒருவன் தேக ஆரோக்கியம் கெடுவதோடில்லாமல் போதையால் அவன் எங்கேயாவது தள்ளாடி விழுந்து விபத்துக்குள்ளாகி உறுப்புகளையும் இழக்க நேரிடும் என்று கற்பனை செய்த ஷீலா உண்மையிலேயே பாராட்டிற்குரியவள்," என்று வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

ஹரியும் சந்திராவும் உச்சி குளிர்ந்து போனார்கள். வீட்டிற்கு வந்ததும் ஹரி ஷீலாவை அருகில் அணைத்து முத்தமிட்டு--

"எப்படிடா கண்ணு குடிகாரன் விபத்திலே காலை இழந்திட்டான்னு கற்பனை பண்ணினே?" என்று கேட்கவும், ஷீலா...

"நான் கால் வரையறதுக்குள்ளாற நேரமாச்சுன்னு டீச்சர் படத்தைப் பிடுங்கிட்டாங்கப்பா," என்றாள் அப்பாவித்தனமாக.

(2,4.92 "குமுதம்" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)