கையிலே வச்ச நோட்டு
கால் வயிறு காணலையே ,
விரலிலே வச்ச பொட்டு
நிறமின்னும் மாறலையே !
தினந்தோறும் கும்பிட்டவங்க
திரும்பித்தான் பார்க்கலையே ,
தெருதோறும் வந்தவங்க
தென்படவே இல்லீங்களே !
தேர்தல் முடிஞ்சதுங்க
தெரு முழக்கம் நின்னதுங்க
ஊர்வலம் முடிஞ்சதுங்க
ஊரும் ஆடி ஓஞ்சதுங்க !
இனி வாக்கு கேட்டவங்க
போக்கு காட்டுவாங்க
நோட்டு கொடுத்தவங்க
நிறையத்தான் சேமிப்பாங்க
நாளும் பார்த்ததுதான்
நாளைக்கும் பார்த்திடலாம் ,
அடுத்த தேர்தலப்போ ...
அவங்களையும் பார்த்திடலாம் !
ஏழைங்க குறைதீர்க்க
எவருக்கும் அக்கறை இல்லே
ஏழைமையை போக்கத்தான்
யாருக்கும் மனமேயில்லே !
வானிருக்கு ... வயலிருக்கு
வாழரெண்டு கையிருக்கு,
போனது போகட்டும்பா...
பொழப்ப பாருங்கப்பா !
ooOoo
1 comment:
நல்ல கவிதை... நன்றாக இருக்கிறது....
Post a Comment