Thursday, December 30, 2010

பிரேமாவை விடவா பிஸிக்ஸ்?



"மச்சி, மைனாவைப் பார்த்தியா?"

"எந்த மைனா?"

"அதாம்மா...பஸ் ஸ்டாண்டிலே சுத்திச் சுத்தி வந்து நீ டாவடிச்சுட்டிருப்பியே பிரேமா."

"பிரேமாவா...எங்கே இருக்கா?"

"நம்ம காலேஜ்லேதான் சேர்ந்திருக்கா, பி.எஸ்.சி கெமிஸ்ட்ரியிலே."

"அடடா, இன்னைக்குக் காலையிலேதாண்டா பீஸ் கட்டி பிஸிக்ஸ் க்ரூப்லே சேர்ந்தேன். தெரிஞ்சிருந்தா கெமிஸ்ட்ரியிலே சேர்ந்திருப்பேனே.என்னோட மார்க்குக்கு அந்த க்ரூப் சுலபமாக் கெடச்சிருக்குமே?"

"ஏண்டா பிஸிக்ஸ்லே இடங்கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்! நீ என்னமோ சலிச்சுக்கறியே?"

"பிரேமாவைவிட பிஸிக்ஸ் பாடமாடா முக்கியம், புண்ணாக்கு? இப்ப என்ன செய்வேன்? ஐயோ ... மூணு வருஷம் அவளோட சேர்ந்து படிச்சா ஒரு லெவல் பண்ணிடலாமே!"-- புலம்பினான் வசந்த்.

அப்போது, பிரேமா தோழியர் புடைசூழ கெமிஸ்ட்ரி சோதனைக்கூடத்துக்கு செல்வதைப் பார்த்த வசந்த் தவித்தான்.

இரவெல்லாம் உறங்கவேயில்லை அவன். எப்படியும் கெமிஸ்ட்ரி க்ரூப்புக்கு மாறிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.

அடுத்த நாள் பெற்றோரிடம் தான் கெமிஸ்ட்ரிக்கு மாற்றிக்கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

"நல்ல க்ரூப்லேர்ந்து ஏன் மாறணுங்கறே"--கேட்ட அப்பாவிடம்,

"அந்த காலேஜ்லே பிஸிக்ஸ்க்கு நல்ல ஆசிரியர் இல்லே. டீச்சிங் சுத்த மோசம். ஆனா...கெமிஸ்ட்ரியிலே ஸ்டேட் ரேங்க், கோல்டு மெடல் எல்லாம் நிறைய வாங்கியிருக்காங்க என்று புளுகினான்.

கெமிஸ்ட்ரி தனக்கு அலர்ஜியாயிற்றே என்று உள்ளூர பயந்தாலும் பிரேமாவின் நினைவுகளே அவனது மூளையைச் சலவை செய்தன.

அடுத்த நான்கு நாட்கள் கல்லூரி அலுவலகத்திற்கு விடாமல் சென்று நச்சரித்துக் கெமிஸ்ட்ரி பிரிவிற்குத் தன்னை மாற்றிக்கொண்டான் வசந்த்.

அன்று சந்தோஷமாகக் கெமிஸ்ட்ரி வகுப்பிற்குள் நுழைந்தவனின் கண்கள் பிரேமாவைத் தேடின. அவள் தென்படாது போகவே விசாரித்தான்.

"அவள் பிஸிக்ஸ் குரூப் வேணும்னு பிரின்ஸிபாலை நச்சரிச்சிட்டு இருந்தாள். ஒரு இடம் இப்பத்தான் காலியாச்சுன்னு அவள் கேட்டிருந்தபடி பிஸிக்ஸ் க்ரூப்புக்கு அவளை மாற்றம் செய்துட்டாங்க" என்று பதில் வந்தது.

(குமுதத்தில் வெளியான என் சிறுகதை)


6 comments:

வெங்கட் நாகராஜ் said...

இதுக்கு பேசாம கணக்குல சேர்ந்துருக்கலாம், நல்லா கணக்கு பண்ணி இருக்கலாம் :) நல்ல திருப்பத்துடன் கூடிய கதை. வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Rekha raghavan said...

விறுவிறுப்புடன் படித்து முடித்த 'நச்' கதை. அருமை.

கே. பி. ஜனா... said...

போகட்டும்! அவங்களுக்குள்ளே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலே.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இது தான் கொடுமைங்கிறது...


அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

ADHI VENKAT said...

இன்று வலைச்சரத்தில் - வானவில்லின் ஏழாம் வண்ணம்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_16.html

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். முடிந்தால் பாருங்களேன்...

நட்புடன்

ஆதி வெங்கட்.

இடைவெளிகள் said...

அசத்தலான கதை